
எகிப்தைச் சேர்ந்த மர்வா ஷெர்பினி தனது பாடசாலைக் காலம் முதல் சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கியவர். 1992 முதல் 1999 வரை எகிப்தின் தேசிய கரப்பந்தாட்ட அணியில் அங்கம் வகித்த மர்வா மருந்தாளர் துறையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர். 2005ம் ஆண்டு அலி உக்காஸ் எனும் மரபணுப் பொறியியலாளரை திருமணம் செய்த இவர் ஜேர்மனிக்கு புலம் பெயர்ந்தார்.
ஜேர்மனியில் வசித்த காலத்தில் ஏனைய முஸ்லிம்களோடு இணைந்து இஸ்லாமிய கல்விக்கும் கலாசாரத்திற்குமான நிறுவனமொன்றை ஆரம்பித்தார். இவரது சமய, கலாசார நடவடிக்கைகள் அதிதீவிர வலதுசாரி கிறிஸ்தவர்களிடையே பெரும் காழ்ப்புணர்வை தோற்றுவித்திருந்தன.
2008 ஆகஸ்ட் மாதம் ட்ரெஸ்டன் நகரிலுள்ள சிறுவர் பூங்காவில் மகன் முஸ்தபாவுடன் மர்வா விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரோமன் கத்தோலிக்கப் பண்பாட்டில் ஊரிய அலெக்ஸ் என்பவன் மர்வா தனது உடலை மறைத்து ஹிஜாப் அணிந்திருந்தமையை பொறுக்க முடியாது அவர் மீது கீழ்த்தரமான அவதூறுகளைச் சுமத்தினான். இழிசொற்களால் அவமானப்படுத்தினான். இன்னும் தீவிரவாதி என்றும் நடத்தை கெட்டவள் எனவும் தூற்றினான். இதனால் மனமுடைந்த மர்வா தனது அடிப்படை உரிமை மீறப்பட்டதாக மாவட்ட நீதிமன்றத்தில் அலெக்ஸ்க்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் அவதூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 780 யூரோக்களை அபராதமாக செலுத்துமாறு அலெக்ஸ்க்கு உத்தரவிட்டது. ஆயினும் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்து அலெக்ஸ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தான். இம்மனு மீதான விசாரணை 2009 ஜூன் முதலாம் திகதி இடம்பெற்றது. அப்போது நீதிமன்றத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாத சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக கொண்ட அலெக்ஸ் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் "நீ இனிமேல் உயிர் வாழத் தகுதியற்றவள்" எனக் கூறியவாறே மர்வா ஷெர்பினி மீது பாய்ந்து 18 தடவை அவரை கத்தியால் குத்தினான். இதன் போது மர்வா மூன்று மாதக் கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு முன்னால் தனது மனைவி கத்திக் குத்துக்கு உள்ளாக்கப்படுவது கண்டு அதிர்ச்சியுற்ற உக்காஸ் மர்வாவைக் காப்பாற்ற முழு முயற்சி செய்தார். இதன் போது உக்காஸும் காயங்களுக்குள்ளானார்.
தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடாத்தினர். குண்டுகள் அலெக்ஸ் மீது பாய்வதற்கு பதில் உக்காஸ் மீதே பாய்ந்தன. உக்காஸ் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தனது தாயும் தந்தையும் தன் கண் முன்னே இரத்தம் சிந்துவதை மூன்றே வயதான முஸ்தபா பார்த்துக் கொண்டிருந்தான்.
நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்ற இவ் அசாதாரண சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை பொது மக்களிடையே ஏற்படுத்திய போதிலும் ஜேர்மனிய ஊடகங்கள் இதனை மிகச் சாதாரண சம்பவமாகவே அறிக்கை செய்தன. இப்படுகொலையினை அறிந்து எகிப்தியர்கள் ஆயிரக்கணக்கானோர் ஜேர்மனுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜேர்மனியின் மத்திய முஸ்லிம் கவுன்ஸில் மர்வாவின் படுகொலையானது மேற்கில் வளர்ந்து வரும் இஸ்லாம் பற்றிய அச்சத்தின் வெளிப்பாடு என கண்டனம் செய்தது.
நாகரிகத்தின் உச்சியில் உள்ள ஜேர்மனியில் ஹிஜாபிற்காக உயிர் துறந்த மர்வா ஷெர்பினி "ஷஹீததுல் ஹிஜாப்" என நினைவு கூறப்படுகிறார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !